CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, February 21, 2011

என் கோபம் தத்திச் செல்கிறது ....

எங்கிருந்தோ என்னை வந்தடைந்ததா
இல்லை என்னுள்ளே உதித்ததாவென்று தெளிவில்லை ...

காலையிலிருந்து சின்னதாய்
மனதை நெருடிக் கொண்டிருந்த எரிச்சல்...

சகிக்க முடியாத ஏதோவொரு தருணத்தில்
என் கீழ் பணிபுரிகிற வனிடத்தில்
சிறு கோபமாய் வெளிப்பட்டு விட ...

அவன் ஆபீஸ் பாயிடம் கடுப்பைக் காட்ட

ஆபீஸ் பாயின் கடுப்பு - அவன் மனைவியுடனான
தொலைபேசி உரையாடலில் பிரதிபலிக்க ....

விக்கித்து நிற்கிறேன் ....
கண் முன்னால் தத்திச் செல்கின்ற என் கோபத்தை
தடுத்து நிறுத்த வழிதெரியாமல்
குற்ற உணர்வில் விக்கித்து நிற்கிறேன்....

Wednesday, December 29, 2010

கொஞ்சிப் பேசுவதும் ... மிஞ்சி விடுவதும் ...


சில நேரங்களில் கொஞ்சிப் பேசுவதும்

சில நேரங்களில் மிஞ்சி விடுவதும்

மனிதனின் இயல்பு தான்...

எப்பொழுது கொஞ்சுகிறான் எப்பொழுது மிஞ்சுகிறான்

என்பதிலே தான் அன்பின் சூட்சுமம் இருக்கிறது ...

நீ மிஞ்சும் போது உன்னைக் கொஞ்சி

நீ கொஞ்சும் போது உன்னை மிஞ்சி நிற்கிறவன்

உன் குணமறிந்து மனம் உணர்ந்தவன்...

அவன் மிஞ்சும் போதெல்லாம் நீ கொஞ்ச வேண்டுமென்றும்

அவன் கொஞ்சும்போது வேண்டுமானால் நீ மிஞ்சலாம் என்கிறவன்

உன் மனமும் உணராது

உன் குணமும் அறியாது

அவனைப் புரிந்து கொள்ளாதவள் என

உன்னை வைது வைப்பான்....

எப்பொழுதாவது மிஞ்சி நிற்கும் போது

கொஞ்சலில் கொட்டிய அன்பு காத்து நிற்கும் வரை கலக்கமில்லை....

இதுவே

எப்பொழுதாவது கொஞ்சி வரும்போதும்

எப்பொழுதோ மிஞ்சிய வேதனை

நெஞ்சைச் சுடுகிற தென்றால் ..

விழித்துக் கொள்ளடி பெண்ணே....

அன்பென்னும் இதம் தாண்டி

உறவு சுடுகிறதென்று

விழித்துக் கொள்ளடி பெண்ணே...

Tuesday, December 28, 2010

நட்பாய் இருக்க மறப்பது.......

நல்லதொரு தோழியின் இதமான அன்பும் பதமான பண்பும்
மனதை நெகிழ்த்தும் போது
ஆருயிர் தோழியை வாழ்க்கைத் துணையாய் கொள்ள
ஏக்கம் கொள்வது ஆணின் மனம் .....

இதுவே...

நல்லதொரு தோழனின் நிபந்தனை இல்லாஅன்பும்
களங்கமில்லா பண்பும் மனதை நெகிழ்த்தும் போது
வாழும் காலம்தோறும் நட்பு நீடிக்க
ஏக்கம் கொள்வது பெண்ணின் மனம் .........

என்ன செய்ய ...
எல்லா தோழியும் நல்ல மனைவியாய் மாறும் அளவுக்கு
எல்லா நண்பனும் நல்ல கணவனாய் மாறுவதில்லையே.....

நட்பின் வாசல் வழியே நுழைந்தாலும் - ஆண்கள்
காதல் கோட்டை கட்டுவதென்னவோ ,
நட்பின் கல்லறையின் மேல் தான்...

நல்ல கணவன் நல்ல நண்பனாய் இலலாதபோது
வருகின்ற வருத்தத்தை விட
நல்ல நண்பன் கணவனான பின்
நட்பாய் இருக்க மறப்பது மிகப் பெரிய ஏமாற்றமே ....

Sunday, July 25, 2010

தாரத்தைப் படைத்தது தேவதை........

என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாயைப் படைத்தார் கடவுள் .....

என்னால் ஒரே உருவத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது

தாரத்தைப் படைத்தது தேவதை....

Friday, March 12, 2010

எத்தனைமுறை .........

எத்தனைமுறை கூந்தலை ஒதுக்கி விடுகிறாய் என்பதை எண்ணுவதிலிருந்து

எத்தனை முறை கண் சிமிட்டுகிறாய் என்று எண்ணும் அளவுக்கு நெருங்கி இருக்கிறேன் ......

என்றாலும் ..... இன்னும்....

உன்னை தினமும் நான் எத்தனை முறை எண்ணுகிறேன் என்பதை எண்ண முடியாமல் போகும் அளவிற்கு உன் மனதை நெருங்கும் தூரம் எவ்வளவென்று தான் தெரிய வில்லை ..........

Tuesday, December 1, 2009

மறுக்க முடிவதில்லை .....



நீ என்னோடு இருக்கின்ற
எப்போதோ எடுத்த நிழற்படங்கள்

நீ இப்போது என்னோடு இல்லாத
நிஜத்தை நினைவுபடுத்தும் போதெல்லாம்

நிஜத்தில் உன் நினைவுகள் என் நிழலாய் என்றும்
என்னுடன் இருப்பதை ஏனோ மறுக்க முடிவதில்லை .....

Thursday, November 5, 2009

என் சொந்தக் காதல் .....




காதல் கடிதம் எழுத
தோழனிடம் கொஞ்சம் கவிதைகள் கடன் வாங்கி

காதல் பரிசு வாங்க
தோழியிடம் கொஞ்சம் ரசனைகளைக் கடன் வாங்கி

வளர்த்த கடன்காரக் காதல் அல்ல என் காதல் ......

என் கவிதைகளில் ரசனை இல்லாமல் போனாலும்
என் ரசனைகள் கவிதையாய் தோன்றாமல் போனாலும்

என் காதல் எனதே எனதான சொந்தக் காதல் ......